சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னையில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நிவர் புயல் அதிதீவிரம் அடைந்து நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மரக்காணம்- புதுச்சேரி இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக நேற்று அதிகாலை முதலே மெரினா, நொச்சிக்குப்பம், காசிமேடு உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் நிவர் புயலின் காரணமாக மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டது. மெரினா கடற்கரையின் மணற்பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்று குளம் போல காட்சி அளித்தது. பொதுமக்கள் கடல் பரப்புக்கு செல்ல அனுமதி இல்லாததால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் பொது மக்கள் அலட்சியமாக கடல் பகுதிக்கு சென்று வந்தபடி இருந்தனர். அதேபோல், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடல் கொந்தளிப்பு வழக்கத்தை விடவும் அதிகமாக காணப்பட்டதால் கடல் சீற்றம் அதிக அளவில் இருந்தது. ஆட்களை கீழே தள்ளும் அளவுக்கு புயல் காற்று வீசியது. இந்தநிலையில் காசிமேடு துறைமுகத்தில் போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் கடல் சீற்றத்தை பார்ப்பதற்கு பொது மக்கள் கூட்டம் கூடி செல்போன்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தனர். மேலும், காசிமேடு துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் செல்லும் மீனவர்களுக்கு மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதனால் 300க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்படிருந்தது.