சேலம்: கார்த்திகை தீபத்தையொட்டி, சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் பலவிதமான அகல் விளக்குகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப நாளில் வீடுகளில் அகல்விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். இந்நாளில் சிவன், அம்மன், விநாயகர், முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை நடக்கும். சிவன் கோயில்களில் அன்று மாலை அகல் விளக்குகள் வைத்து, கல்தூணில் மகாதீபம் ஏற்றி, சொக்கப்பனை கொளுத்தப்படும். இதை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கோயில்களுக்கு வருகை தருவார்கள். நடப்பாண்டு கார்த்திகை தீபம் வரும் 29ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் அகல்விளக்குகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டு வருகிறது.