புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை வீட்டின் 2 ஆயிரம் ஓடுகளை கழற்றி பாதுகாப்பாக வைத்த விவசாயி: கஜாவில் முற்றிலும் சேதமானதால் உஷார் நிலை

புதுக்கோட்டை: கீரமங்கலம் அருகே விவசாயி புயல் முன் எச்சரிக்ைக நடவடிக்கையாக தனது வீட்டின் 2 ஆயிரம் ஓடுகளை கழற்றி கீழே பாதுகாப்பாக வைத்துள்ளார். புதுக்கோட்டைமாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள நகரம் கிராமத்தை சேர்ந்தவர் குமார். விவசாயி. இவரின் குடிசை வீடு கடந்த கஜாபுயலின் போது முற்றிலும் சேதம் அடைந்தது. இதனை அடுத்து அரசாங்கம் சார்பில் வீடு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் வீடு கிடைக்கவில்லை. பின்னர் குடும்பத்துடன் வாழ ஓடுகளை கொண்டு வீடு கட்டியுள்ளார். அதன் அருகே சிறிய குடிசை வீடும் கட்டியுள்ளார். இந்நிலையில் நிவர் புயல் கரையை கடந்து புதுக்கோட்டையை தாக்கும் என்று வாணிலை மையம் அறிவித்துள்ளது . புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கஜாவை போல் புயல் தாக்கிவிடுமோ என்று முன்னெச்சரிக்கையாக இருந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கீரமங்கலம் அருகே விவசாயி குமார் தன் வீட்டின் மேல் இருந்த இரண்டாயிரம் ஓடுகளை கழற்றி பாதுகாப்பாக கீழே இறக்கி வைத்துள்ளார். புயல் பாதிப்பால் ஓட்டு வீடு சேதம் அடைந்தால் அதனை மீண்டும் புனரமைக்க எனக்கு போதுமான பண வசதியில்லை. கஜா புயலால் நான் வீடு இன்றி அவதிப்பட்டுள்ளேன். இதனால் முன்னெச்சரிக்கையாக நிவார் புயல் தாக்குதல் நடத்தினால் அதில் இருந்து தப்பிக்க தற்போது வீட்டின் மேல் இருந்த ஓடுகளை கழட்டி வைத்துள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: