அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டை எதிர்த்து மனு: அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் கொண்டுவரப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், கவுன்சலிங்கை நிறுத்த வேண்டுமென்ற மனுதாரரின் கோரிக்கையையும் நிராகரித்து விட்டது. மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்தில் இளங்கலை படிப்புகளில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் ஆளுநரும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இந்த 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் ஏறத்தாழ 313 மாணவர்கள் மருத்துவ படிப்பிலும், 92 மாணவர்கள் பல் மருத்துவத்திலும் சேருவதற்கான வாய்ப்பினை பெற உள்ளனர்.

தற்போது அதற்கான கவுன்சலிங் நடைபெற்று வரும் நிலையில், நீதிபதிகள் சத்திய நாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில், 7.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும், கவுன்சலிங்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வக்கீல் ஒருவர் சார்பில் முறையிடப்பட்டது.இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், மாணவர் சேர்க்கை நடந்து வரும் நிலையில், மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இடையில் தலையிட்டு கவுன்சலிங்கை நிறுத்த முடியாது. உரிய நடைமுறைகளை பின்பற்றி மனு விசாரணைக்கு பட்டியலிடப்படும் போது விசாரிப்பதாக மனுதாரரிடம் தெரிவித்தனர்.

Related Stories: