சென்னை: அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் கொண்டுவரப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், கவுன்சலிங்கை நிறுத்த வேண்டுமென்ற மனுதாரரின் கோரிக்கையையும் நிராகரித்து விட்டது. மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்தில் இளங்கலை படிப்புகளில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் ஆளுநரும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இந்த 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் ஏறத்தாழ 313 மாணவர்கள் மருத்துவ படிப்பிலும், 92 மாணவர்கள் பல் மருத்துவத்திலும் சேருவதற்கான வாய்ப்பினை பெற உள்ளனர்.