புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் தவசி காலமானார்

மதுரை: புற்றுநோய் பாதித்து மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். ‘கிழக்குச் சீமையிலே’ துவங்கி பல்வேறு தமிழ் சினிமாக்களில் நடித்தவர் தவசி (60). தேனி மாவட்டம், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த இவர், மனைவி அங்கம்மாளுடன் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை மட்டப்பாறை அருகே தாதன்குளத்தில் வசித்து வந்தார். மகன் பீட்டர் ராஜன் கம்பி கட்டும் வேலை, மகள் முத்தரசி நூறு நாள் வேலைக்கான களப்பணியாளராக உள்ளனர். மகன், மகளுக்கு திருமணமாகி விட்டது.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடிகர் சூரியின் தந்தையாக நடித்து பேசிய. ‘கருப்பன் குசும்புக்காரன்’ வசனம் மூலம் தவசி பிரபலமானார். 147 படங்களில் நடித்துள்ள இவர் உணவுக்குழாய் புற்றுநோய்க்கு ஆளாகி, ஏழ்மை நிலையில், அடையாளம் தெரியாத அளவிற்கு உடல்நிலை பாதித்து அவதிப்பட்டு வந்தார். மதுரை, நரிமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நவ. 11ல் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு என்டோஸ்கோபி செய்து, உணவு குழாயை சென்று சேரும் விதம் ‘ஸ்டண்ட்’ வைத்து சிகிச்சை தரப்பட்டது. இதற்கிடையே நேற்று இரவு 8.20 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடலை  சொந்த ஊரான தாதன்குளத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை உடல் அடக்கம் செய்யப்படும் என அவரது மகன் ராஜன் தெரிவித்தார்.

Related Stories: