கனமழையில் இருந்து பாதுகாக்க விவசாயிகள் பயிர்காப்பீடு செய்ய வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பயிர்காப்பீட்டிற்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: வேளாண் பயிர்களான சம்பா நெற்பயிர், சிறுதானிய பயிர்கள், பயறுவகை, பயிர்கள், எண்ணெவித்து, பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களான வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளை, சிவப்பு மிளகாய், கேரட், கத்திரி, வெண்டை, தக்காளி, பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி மற்றும் முட்டைகோஸ் பயிர்களுக்கான பயிர்காப்பீடு நடைபெற்று வருகிறது.

வரும் நவம்பர் 24,25 மற்றும் 26ம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை கணித்துள்ளதால் அனைத்து விவசாயிகளும் தங்களுடைய பயிர்களை அருகாமையில் உள்ள பொது சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது வர்த்தக சங்களிலோ உரிய காப்பீடு கட்டணம் செலுத்தி காப்பீடு செய்து இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட இருக்கும் நிதி இழப்பீடுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் ஈரோடு, கரூர்,பெரம்பலூர், ராமநாதபுரம், திருச்சி, திருவாரூர், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், சிவகங்கை, திருப்பூர், தருமபுரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி,வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் சம்பா நெல் காப்பீடு செய்ய இறுதி நாள் வரும் 30ம் தேதி என தெரிவிக்கப்படுகிறது. மேலும் தஞ்சாவூர், அரியலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சம்பாநெல் காப்பீடு செய்ய இறுதிநாள் டிசம்பர் 12ம் தேதி ஆகும். பயிர்காப்பீடு செய்ய தேவையான ஆவணங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அடங்கல்/சிட்டா, வங்கிகணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் போன்றவை தேவையான ஆவணங்கள் ஆகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: