பூதப்பாண்டி : நாகர்கோவில் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை சடலம் கால்வாயில் மிதந்து வந்தது. நாகர்கோவில் அடுத்த இறச்சகுளம் பெரியகுளத்தில் தற்போது தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் இந்த குளத்தின் மறுகால் ஓடையிலும் அதிகளவில் தண்ணீர் செல்கிறது. நேற்று மதியம் 2 மணியளவில் இந்த மறுகால் ஓடையில், துணியால் சுற்றப்பட்ட நிலையில் பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் மிதந்து வந்தது. பஞ்சாயத்து அலுவலகம் அருகே உள்ள ஜீவாநகர் பகுதியில் தண்ணீரில் மிதந்த நிலையில் இருந்த குழந்தையின் சடலத்தை பார்த்த பொதுமக்கள், பூதப்பாண்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.