பைக்கில் லாரியை முந்தி செல்ல முயன்றபோது சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி

குன்றத்தூர்:குன்றத்தூர், புது வட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் சிபாஸ் (15). குன்றத்தூரில் உள்ள அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். இவரது தம்பி அனஷ்காஜா(13). கோவூர் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை சகோதரர்கள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த முஷாரப் (15) ஆகியோர் பைக்கில் கோவூருக்கு புறப்பட்டனர். கோவூர் மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றனர். அப்போது பைக் நிலை தடுமாறி 3 பேரும் கீழே விழுந்தனர். அந்த நேரத்தில், பின்னால் வந்த லாரி, அனஷ்காஜா மீது ஏறியது. இதில் சிறுவன், லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தான்.

தகவலறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரை வலைவீசி தேடுகின்றனர்.

Related Stories: