மக்களின் குறைகளை தீர்க்க கொண்டுவரப்பட்ட இ-சேவை மையம் காகித அளவிலேயே உள்ளது: உயர் நீதிமன்றம் அதிருப்தி

சென்னை: நீலகிரி மாவட்டம் மசினகுடி கிராமம், யானைகள் வழித்தடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு டாஸ்மாக் கடைகள் துவங்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த ஜெயினுலாபுதீன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல், மசினகுடி பகுதியில் டாஸ்மாக் கடைகள் ஏதும் தொடங்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், இது சம்பந்தமாக கடந்த செப்டம்பர் மாதம் அளித்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததால் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளோம் என்றார்.

 வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுமக்களின் மனுக்களுக்கு பதிலளிக்காத அதிகாரிகளின் மெத்தன போக்குக்கு கண்டனம் தெரிவித்தனர். மக்களின் குறைகளுக்கு தீர்வு காண கொண்டுவரப்பட்ட அரசு இ-சேவை என்பது காகித அளவிலேயே உள்ளது. கோரிக்கை மனுக்களுக்கு அதிகாரிகள் உரிய பதிலை அளித்து இருந்தால் இதுபோன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்காது. மனுதாரரின் கோரிக்கை மனுவுக்கு பதில் அளிக்காத அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்தி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்கும்படி ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: