திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலுக்கு சொந்தமான தங்கும் விடுதிகள் சேதம் அடைந்து உள்ளதால் பக்தர்கள் தவிக்கின்றனர். அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் மற்றும் பல பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த கோயிலில் நடைபெறும் ஆடி கிருத்திகை விழா, திருப்படி திருவிழா மற்றும் சஷ்டி விழா, சித்திரை மாசி பிரமோற்சவம் மிகவும் பிரபலமானது. தினமும் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்து சாமிதரிசனம் செய்து செல்கின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் சில பக்தர்கள், கோயில் விடுதியில் தங்கியிருந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.கோயிலுக்கு சொந்தமான கார்த்திகேயன் மற்றும் தணிகை இல்லங்களில் பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்குகின்றனர். தற்போது இந்த கட்டிடம் முறையாக பராமரிப்பின்றி சேதம் அடைந்து வருகிறது. கட்டிடங்களில் மேற்கூரைகள் உடைந்து காணப்படுகிறது. கழிவறைகள் சேதம் அடைந்துள்ளதுடன் சுத்தமாக இல்லை. கதவுகள் உடைந்து தொங்குகிறது. மின்விளக்குகள் மற்றும் ஏசி ஆகியவறை பயன்படுத்த முடியாமல் உள்ளது.