நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவியால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று டாக்டருக்கு படிக்கிறார் ஏழை மாணவி சஹானா.தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை சேர்ந்தவர் சஹானா. இவர் பிளஸ் டூ தேர்வில் 600க்கு 524 மதிப்பெண்கள் பெற்றார். டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்டார். ஆனால் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க முடியாமல் கஷ்டப்பட்டார். இவரது வீட்டில் மின்சார வசதி கூட இல்லை. இதை கேள்விப்பட்டு தஞ்சாவூர் கலெக்டர் அவரது வீட்டுக்கு மின்வசதி ஏற்படுத்தி தந்தார்.
இந்நிலையில் சஹானா பற்றி அறிந்த சிவகார்த்திகேயன், தனது ரசிகர் மன்றம் மூலமாக அவரை தொடர்பு கொண்டு பேசினார். ‘நீ என்ன படிக்க விரும்புகிறாயோ படி. உன்னைப் பற்றி படித்துவிட்டு எனது மனைவி கண் கலங்கினார். உனக்கு வேண்டிய உதவியை நான் செய்கிறேன்’ என்றார். அதன்படி நீட் தேர்வுக்கு கோச்சிங் செல்வதற்கு சிவகார்த்திகேயன் சஹானாவுக்கு உதவி செய்தார். நீட் பயிற்சி மையத்தில் அவரை சேர்த்துவிட்டார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற சஹானாவுக்கு இப்போது திருச்சி அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.