கொரோனாவுடன் பரவும் டெங்கு பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க மருத்துவர்கள் அறிவுரை

சென்னை:தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. தினசரி பாதிப்பு 2 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. இதேபோன்று, மரணங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. தற்போது தினசரி 10 முதல் 20 பேர் மட்டுமே மரணம் அடைகின்றனர்.ஒருபக்கம் கொரோ னாவை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், மழைக்கால நோய்களான டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா உள்பட பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, டெங்கு மற்றும் கொரோனாவிற்கு காய்ச்சல், சளி, இருமல் என்று ஒரே அறிகுறியாக உள்ளதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக, டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்களை பரப்பும் கொசுக்கள் நல்ல நீரில் மட்டுமே வாழும். எனவே வீட்டின் மொட்டை மாடியில் நல்ல நீர் தேங்கும் வகையில் உள்ள பொருட்களை முறையாக அகற்ற வேண்டும். வீட்டின் மேலே உள்ள தேங்காய் ஓடுகள், சரடுகள், பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள் ஆகியவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். டெங்குவை கட்டுப்படுத்துவதில் நிலவேம்பு குடிநீர் முக்கிய பங்காற்றி வருகிறது என்பதால் தினசரி அல்லது வாரம் 2, 3 முறை குடிக்க வேண்டும். மேலும் மூலிகை டீயும் அருந்தலாம். குழந்தைகள் மற்றும் முதியவர்கள் டெங்குவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் உணவுகளை அளிக்க வேண்டும். பொது குழாய்களில் இருந்து பிடித்த குடிநீரை கொதிக்க விட்டு அருந்த வேண்டும். குறிப்பாக சளி, காய்ச்சல், இருமல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் டெங்கு மற்றும் கொரோனா பரிசோதனை இரண்டும் செய்து கொள்ள வேண்டும். ஒரு பரிசோதனை செய்து விட்டு மற்றும் ஒரு சோதனையை செய்யாமல் இருக்க கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: