மதுரை: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் வரும் 20ம் தேதி சூரசம்ஹாரம் வழக்கம் போல் கடைக்கரையில் நடத்தப்படும் என ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் விரதமிருந்து சூரசம்ஹார நிகழ்வினை கண்டு செல்வது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக சூரசம்ஹார நிகழ்ச்சியை காண பக்தர்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும், சூரசம்ஹார நிகழ்வு கடற்கரையில் வழக்கம் போல் நடைபெறாது என்றும் சூரசம்ஹாரத்தை வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சியில் மக்கள் பார்த்துக்கொள்ளலாம் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் ஒரு பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.