டெல்லியில் பாஜக தேசிய மகளிரணித் தலைவராக பொறுப்பேற்றார் வானதி சீனிவாசன்!: மகளிரணி நிர்வாகிகள், பாரதிய ஜனதா பிரமுகர்கள் வாழ்த்து..!!

டெல்லி: பாஜக தேசிய மகளிரணி தலைவராக வானதி சீனிவாசன் பொறுப்பேற்றுள்ளார். பாஜக கட்சியில் இணைந்த வானதி சீனிவாசன், 1993 முதல் அக்கட்சியின் பல்வேறு பதவிகளில் வகித்து வருகிறார். இவர் தேசிய செயற்குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார். தற்போது தமிழக பாஜக-வின் துணைத் தலைவர்களில் ஒருவராக பதவி வகித்து வரும் வானதி சீனிவாசனுக்கு பாஜக மகளிரணியின் அகில இந்திய தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் வானதி சீனிவாசனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது பலரது பாராட்டுக்களைப் பெற்று தந்துள்ளது. இவரை தேசிய மகளிரணித் தலைவராக அக்கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா கடந்த மாதம் அறிவித்தார். இந்நிலையில் வானதி சீனிவாசன் டெல்லியில் தேசிய மகளிரணி தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார்.

முன்னாள் பாஜக  மகளிரணித் தலைவராக மிருதுளா சீதா என்பவர் நேற்று மறைந்ததன் காரணமாக பதவியேற்பு விழா என்பது ஆடம்பரமின்றி நடைபெற்றது. பாரதியார் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. வானதி சீனிவாசன் பாஜக தலைமை அலுவலகத்தில் வரும் வேளையில், மேளதாளங்கள், சால்வைகள் மற்றும் பூச்செண்டுகள் கொடுத்து மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் பாரதிய ஜனதா பிரமுகர்கள் அவரை வரவேற்றனர். பின்னர் பாஜக தலைமை அலுவலகத்தில் வானதி சீனிவாசன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த பதவியேற்பு விழாவின் போது ஏற்கனவே மகளிர் அணி தலைவராக இருந்த விஜயா என்பவர் வானதி சீனிவாசனின் கரம் பிடித்து அவருடைய இருக்கையில் அமர்த்தினார். இந்நிகழ்வு மிகவும் எளிதாகவே நடைபெற்றது. தற்போது மகளிர் அணி நிர்வாகிகள், பாஜக பிரமுகர்கள் அனைவரும் வானதி சீனிவாசனை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: