தமிழக அரசின் முடிவை ஏற்க மறுப்பு அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது: ஐகோர்ட்டில் யுஜிசி திட்டவட்டம்

சென்னை: அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் பல்கலைக்கழக மானியக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ராம்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.இந்த வழக்குகளில் பதிலளித்த அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், அரியர் தேர்வுகளை ரத்து செய்தது விதிகளுக்கு முரணானது எனத் தெரிவித்திருந்தது. பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில், பருவத் தேர்வு நடத்தப்பட வேண்டியது அவசியம் எனவும், மாணவர்களை முந்தைய தேர்வு மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்ச்சியடையச் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வழக்குகள் நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரியர் தேர்வுகள் ரத்து விவகாரத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பதில் மனுவில் தமிழக அரசின் ரத்து அறிவிப்பு குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

 இந்த நிலையில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது சில பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் ராம்குமார் மீண்டும் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கை நீதிபதி சத்யநாராயணன் ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பல்கலைக்கழக மானிய குழு தரப்பில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய பட்டுவிட்டதாகவும் அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. பிரதான வழக்கு விசாரணை நாளை  வர உள்ளதால், அந்த வழக்கோடு சேர்த்து இந்த வழக்கை விசாரிக்கவுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: