திருச்சுழி அருகே சுடுகாட்டிற்கு வழியில்லை தண்ணீருக்குள் பிணத்தை தூக்கி செல்லும் அவலம்

திருச்சுழி: திருச்சுழி அருகே  ஓடை வழியாக சுடுகாட்டிற்கு செல்ல சாலையின்றி பிணத்தை தண்ணீருக்குள் கொண்டு செல்லும் அவலநிலை தொடர்கிறது. திருச்சுழி அருகே வடக்குநத்தம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் அனைத்து சமுதாய மக்களுக்கும் பயன்பாடும் வகையில் கிராமத்தின் கிழக்கு பகுதியில் சுமார் 500 மீட்டர் தொலைவில் சுடுகாடு உள்ளது. மரணம் ஏற்பட்டால் பிரேதத்தை கொண்டு செல்ல சாலை வசதியின்றி ஓடை வழியாக எடுத்து செல்லும் நிலையுள்ளது. சில தினங்களுக்கு முன்பு விஜயலட்சுமி என்ற பெண்மணி இயற்கை மரணம் அடைந்தார். அவரது பிணத்தை கொண்டு செல்ல முடியாமல் அவதிபட்டனர். மேலும் சுடுகாட்டில் மேற்கூரை இல்லாததால் மழையில்  எரியூட்ட முடியாமல் அவதிப்பட்டனர். எனவே, பிணத்தை கொண்டு செல்லவும், சுடுகாட்டிற்கு போதுமான வசதி செய்து தரவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: