356வது ஆண்டை நிறைவுசெய்த அரசு பொது மருத்துவமனை: கேக் வெட்டி கொண்டாட்டம்

சென்னை: சென்னையில் உள்ள ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இந்தியாவில் உள்ள மிகவும் பழமையான மருத்துவமனைகளில் ஒன்று.  பிரிட்டிஷ் ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க, கடந்த 1664ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி சர் எட்வர்ட் விண்டர் என்பவரால் ஜார்ஜ் கோட்டையில்  இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டது.

பின்னர், 1772ம் ஆண்டு அங்கிருந்து சென்ட்ரல் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, 1835ம் ஆண்டு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டது. தொடர்ந்து  1850ம் ஆண்டு அக்.1ம் தேதி சென்னை மருத்துவ கல்லூரியாக மாற்றப்பட்டது. உலகில் பெண் ஒருவர் முதன்முறையாக மருத்துவ பட்டம் பெற்றது  இந்த மருத்துவமனையில்தான்.

இங்கு தற்போது 42 துறைகள் உள்ளன. 680 மருத்துவர்கள், 1050 செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கை  வசதியுடன், மாதத்திற்கு சராசரியாக 13 ஆயிரம் பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்றுடன் 356வது ஆண்டை இந்த  மருத்துவமனை நிறைவு செய்தது. இதையொட்டி, மருத்துவமனை முதல்வர் தேரனிராஜன்  தலைமையில்,  நிலைய மருத்துவ அலுவலர் சுப்பிரமணியன், மருத்துவர்கள்,  செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடினர்.

Related Stories: