சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை கப்பல் போலு தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன், சமையல் மாஸ்டர். இவரது மகன் அருள்ராஜ் (19), மகள் துர்கா (14). அரியலூரில் வாடகை வீட்டில் தங்கி அருள்ராஜ் தனியார் பொறியியல் கல்லூரியிலும், துர்கா 10ம் வகுப்பும் படித்து வந்தனர். இருவரும் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளனர். நேற்று முன்தினம் அருள்ராஜ், துர்கா மற்றும் அதே பகுதியில் வசிக்கும் பாபுவின் மகன் விஷ்ணு (14), ஜான்சனின் குழந்தைகளும், இரட்டையர்களுமான மார்ட்டின் (13), மார்க்ரேட் (13) ஆகிய 5 பேர் குடும்பத்துடன் காசிமேடு மீன்பிடி துறைமுக கடற்கரைக்கு சென்றனர். அங்கு கடலில் குளித்தபோது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி துர்கா, விஷ்ணு, மார்ட்டின், மார்க்ரேட் ஆகியோர் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இவர்களை மீட்க முயன்ற அருள்ராஜும் கடலில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அலறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அங்கிருந்த மீனவர்கள் ஓடி வந்து சிறுவர்களை தேடினர்.
இதில் அருள்ராஜ் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.