திருத்தணி கோயிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவில் மற்றும் கோட்டா ஆறுமுகசுவாமி ஆகிய கோயில்களில் நேற்று கந்த சஷ்டி விழா துவங்கியது, வரும்,21ம் தேதி வரை நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் தீபாவளி நோன்பு மறுநாள் முதல் கந்த சஷ்டி விழா, ஏழுநாட்கள் நடக்கிறது. அந்த வகையில், இந்தாண்டிற்கான கந்த சஷ்டி விழா, நேற்று காலை துவங்கியது. காலை, 10:00 மணிக்கு மூலவருக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை, 10:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை காவடி மண்டபத்தில், சண்முகர்  உற்சவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் லட்சார்ச்சனை விழா நடைபெற்றது ஆனால் பக்தர்களுக்கு யாருக்கும் அனுமதி இல்லை. இன்று மூலவருக்கு பட்டு, 16ம் தேதி தங்ககவசம், 17ம் தேதி திருவாபரணம், 18ம் தேதி வெள்ளி கவசம், 19ம் தேதி சந்தன காப்பு போன்ற அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.  

இம்மாதம், 20ம் தேதி  காலை, மாலை, 3:00 மணி வரை லட்சார்ச்சனையும், மாலையில் சண்முகப்பெருமானுக்கு கோயில் நிர்வாகம் சார்பில்  புஷ்பாஞ்சலியும், 21ம் தேதி நண்பகலில் உற்சவர் திருக்கல்யாணமும் நடக்கிறது. ஆறுபடை வீடுகளில் முருகன் கோயில்களில் கடைசி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும், ஆனால் திருத்தணி கோயிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும் அதே போல் திருத்தணி முருகன் கோயிலின் உப கோயிலான ஸ்ரீகோட்ட ஆறுமுக சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழா, நேற்று முதல் துவங்கி வரும்,21ம் தேதி வரை நடக்கிறது.  மூலவருக்கு காலை, 8:00 மணிக்கு, 16ம் தேதி பட்டு, 17ம் தேதி தங்ககவசம், 18ம் தேதி பச்சைபட்டு,19ம் வெண்பட்டு, 20ம் தேதி தங்ககவசம் என தினமும் காலை, 8;00 மணிக்கு மூலவருக்கு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்படும்.  இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் பொறுப்பு லட்சுமணன் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.  

Related Stories: