குடும்பம் நடத்திவிட்டு வேறு பெண்ணுடன் திருமணமா? 24 வயது வாலிபரை கத்தியால் சரமாரி குத்திய 42 வயது பெண்: கொடைக்கானலில் பரபரப்பு

கொடைக்கானல்: தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ததால், ஆத்திரமடைந்த 42 வயது பெண், 24 வயது வாலிபரை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவர் பிரதீப் (24), டிரைவர். இவரது வீடு அருகே வசிப்பவர் ராஜேஷ் மனைவி பிரமிளா (42). இவர், கொடைக்கானல் அதிமுக மகளிர் அணியில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார். ராஜேஷ் 6 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். அதன்பின் பிரதீப், பிரமிளா இடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக இருவரும் கணவன், மனைவி போல குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதுதெரிந்து அதிர்ச்சியடைந்த பிரதீப்பின் பெற்றோர், அவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.

தனக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பது குறித்து, பிரமிளாவிடம் பிரதீப் தெரிவித்துள்ளார். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று முன்தினம் பிரதீப்பிடம், பிரமிளா கடும் வாக்குவாதம் செய்துள்ளார்.அப்போது பிரதீப் தான் திருமணம் செய்வது உறுதி என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரமிளா, கத்தியை எடுத்து பிரதீப்பின் நெஞ்சிலும், தலையிலும் சரமாரியாக குத்தினார். படுகாயம் அடைந்த பிரதீப்பை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  சேர்த்துள்ளனர். கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிந்து, பிரமிளாவை கைது செய்தனர்.

Related Stories: