பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மகளை கேலி செய்ததை தட்டிக்கேட்ட தம்பதி வெட்டிக்கொலை; 3 பேர் கைது: கொடுமுடி அருகே பயங்கரம்

மொடக்குறிச்சி:   ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சிட்டபுள்ளாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் மதுசூதனன் (20). இவருக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள். இதையடுத்து நண்பர்கள் சூர்யா (23), நவீன் (21), ஜீவானந்தம் (20), ஜீவானந்தன் (21), கிருபாகரசங்கர் (23), கார்த்தி (23) ஆகியோருடன் சிட்டபுள்ளாம்பாளையம் பள்ளி அருகே ரோட்டில் மது அருந்தியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அப்போது கொடுமுடி கறிக்கடை தெருவைச் சேர்ந்த மேனகா (35), தந்தை வீட்டுக்கு தீபாவளி கொண்டாட கணவர் பெருமாள், மகன் வைரமூர்த்தியுடன் (13) அவ்வழியாக பைக்கில் வந்துள்ளார். பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள், மேனகாவை கேலி பேசியதாக தெரிகிறது. உடனே பெருமாள், ஏன் கேலி செய்கிறீர்கள்? என தட்டிக்கேட்டார். இதனால் வாய் தகராறு ஏற்பட்டது. உடனே இளைஞர்கள் பெருமாளை தாக்கியுள்ளனர்.

தடுக்கச் சென்ற மேனகாவை கீழே தள்ளியதில் அவர் காயம் அடைந்தார். மேனகாவின் தந்தை ராமசாமி (57), தாய் அருக்காணி (56) மற்றும் அவரது மகன் பூபதி (28) ஆகியோரும் அங்கு வந்து தகராறில் ஈடுபட்ட இளைஞர்களை சத்தம் போட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர். மேனகா காயம் அடைந்ததால் கொடுமுடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.இந்நிலையில் சூர்யா, அவரது தந்தை சாமிநாதன் (49), கிருபாகரசங்கர் ஆகிய 3 பேரும் தங்களிடம் தகராறு செய்த ராமசாமி, அவரது மனைவி அருக்காணி ஆகிேயார் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.

நள்ளிரவில் குடிபோதையில் ராமசாமியின் வீட்டிற்கு அவர்கள் சென்று அரிவாளால் ராமசாமியையும், அருக்காணியையும் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினர்.

கொடுமுடி போலீசார் வழக்குப்பதிந்து, சூர்யா, அவரது தந்தை சாமிநாதன், கிருபாகரசங்கர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும், காயமடைந்த மேனகா கொடுத்த புகாரின் பேரில் மதுசூதனன், சூர்யா, நவீன்,  ஜீவானந்தம், ஜீவானந்தன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: