37 ஆண்டு கழித்து மீண்டும் குன்னூரில் தென்பட்ட அரிய வகை லசார்ட் குக்கூ பறவை

குன்னூர் : 37 ஆண்டுகள் கழித்து நீலகிரி மாவட்டம் குன்னூர் வனப்பகுதியில் தென்பட்ட அறிய வகை லசார்ட் குக்கூ பறவையை கண்டு வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் 65 சதவிகிதம் அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ள மாவட்டம். இங்கு யானை, புலி, கரடி, சிறுத்தை, காட்டு மாடு என ஏராளமான வன விலங்குகள் உள்ளன. விஷத்தன்மை அதிகம் கொண்ட பாம்புகள், பல்வேறு வகையான பறவையினங்கள் நீலகிரி வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்றன.

அவை அவ்வப்போது கண்களுக்கு தென்படுகின்றன. இதேபோல், குன்னூர் அருகே உள்ள கோலணிமட்டம் என்ற கிராமத்தில் அறிய வகை  பறவையான லசார்ட் குக்கூ தென்பட்டது.இந்த பறவை பாகிஸ்தான், சீனா, ஜப்பான், வியட்நாம், வட கொரியா, தென் கொரியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.  இந்தியாவில் இமயமலை, ஜம்மு, காஷ்மீர், உத்தரகாண்ட் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது. லசார்ட் குக்கூ வகை பறவை கடல் மட்டத்திலிருந்து சுமார் 1300 அடி முதல் 3600 அடி உயரம் கொண்ட பகுதிகளில் நிலவும் காலநிலையில் வாழக்கூடியவை.  

இந்தியாவில் உள்ள லசார்ட் குக்கூ பறவை குளிர் காலத்தில் இந்தியாவில் இருந்து இலங்கை மற்றும் ஆப்ரிக்காவிற்கு சென்று இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இவ்வகை பறவையினம் வேறு பறவைகளின் கூட்டில் முட்டையிடுகின்றன.  இந்த பறவை தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோடியோகரை, திருவண்ணாமலை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் லசார்ட் குக்கூ பறவை 1983ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

37 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் கேத்தி வேலி தொடரில் கோலணிமட்டம் என்ற இடத்தில் பதிவாகியுள்ளது. அந்த பகுதியை சேர்ந்த விவசாயி, மற்ற பறவைகள் இந்த பறவையை துரத்துவதை கண்டு அதை மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விட்டுள்ளார். 37 ஆண்டுகள் கழித்து மீண்டும் அறிய வகை பறவை நீலகிரியில் பதிவானது பறவை ஆர்வலர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: