மேலூர் அருகே பரபரப்பு விளைநிலத்தில் காஸ் குழாய்பதிக்க கிராம மக்கள் எதிர்ப்பு-பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டம்

மேலூர்: மேலூர் அருகே விளைநிலங்களில் காஸ் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ளது அலங்கப்பட்டி. இங்கு விளைநிலங்களை அழித்து காஸ் குழாய் பதிக்கும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக மரங்கள், பயிர்கள் அழிக்கப்பட்டன. தகவலறிந்த கிராமமக்கள், பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொட்டாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, காஸ் குழாய் பதிக்கும் நிர்வாக அதிகாரிகள் மற்றும் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தற்போது நெல் விளைவிக்கப்பட்டுள்ளதால் அறுவடை முடியும் வரை எந்தவிதமான இயந்திர பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என கிராமமக்கள் வலியுறுத்தினர். கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து பணிகளை முற்றிலுமாக நிறுத்த மனு அளிக்க உள்ளோம். பணிகள் தொடர்ந்து நடைபெற்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.

இதையடுத்து விவசாய பணிகள் முடியும் வரை பணிகள் மேற்கொள்ளப்படாது என கிராமமக்களிடம் உறுதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இயந்திரங்கள் அப்பகுதியில் இருந்து உடனடியாக அகற்றப்பட்டு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

Related Stories: