தீபாவளியை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட் இன்று செயல்படும்: ஞாயிற்றுகிழமை விடுமுறை

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று கோயம்பேடு மார்க்கெட் வழக்கம் போல் இயங்கும். அதற்கு பதிலாக வரும் ஞாயிற்று கிழமையன்று மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்படுகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பை தொடர்ந்து, கடந்த மே மாதம் மூடப்பட்டது. பின்னர் ஊரடங்கு தளர்வின்போது வியாபாரிகள் சங்கத்தினரின் வலியுறுத்தல்பேரில், கடந்த 2 மாதங்களுக்கு முன் மொத்த காய்கறி கடைகளும், சில நாட்களுக்கு முன் பழக்கடைகளும் திறக்கப்பட்டன.

இதையடுத்து, வரும் 16-ம் தேதி சிறு மொத்த காய்கறி கடைகள் திறக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்டு தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று கோயம்பேடு மார்க்கெட் வழக்கம் போல் இயங்கும். அதற்கு பதிலாக, வரும் ஞாயிறன்று மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்படுகிறது. அன்றைய தினம் தூய்மை பணிகள் நடைபெறும் என கோயம்பேடு மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: