சென்னை: தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகரை சந்தித்து புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது: போக்குவரத்து விதிமீறலில் தற்போது ஒரு துணை ஆய்வாளர் தினசரி 20 வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்று உயர் அதிகாரிகள் டார்கெட் நிர்ணயித்துள்ளனர். அதன்படி லாரி ஓட்டுனர்கள் மீது சென்னை நகரமெங்கும் பல்லாயிரக்கணக்கான வழக்குகள் தினசரி பதிவு செய்யப்படுகிறது. சிக்னல்களில் நிறுத்தாமல் வரம்பு மீறும் வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கலாம் என்ற சட்டத்தை காவல் துறையினர் தவறாக பயன்படுத்தி அபராதம் வசூலிக்கிறார்கள்.