சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 17 நிமிடங்கள் தாமதமாக சென்னையிலிருந்து தூத்துக்குடி புறப்பட்டுச் சென்றது. சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் வழக்கமாக நடைமேடை 55 அல்லது 57லிருந்து காலை 8.35 மணிக்கு புறப்பட்டு செல்லும். ஆனால், நேற்று பழைய விமான நிலையம் பகுதியில் உள்ள நடைமேடை 2லிருந்து புறப்பட்டது. எனவே அந்த விமானத்தில் ஏற்றப்பட வேண்டிய பயணிகளின் லக்கேஜ்கள், உள்நாட்டு முனையத்திலிருந்து பழைய விமான நிலைய பகுதிக்கு கொண்டு சென்று ஏற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது. எனவே, விமானம் புறப்படுவதில் 17 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டு, காலை 8.52 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.