விவசாய அமைச்சர் பதவியை கேட்டேனா? அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம்

சென்னை: விவசாயத்துறை அமைச்சர் பதவியை கேட்கவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெளிவுபடுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் விவசாய துறை அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார். இதற்கிடையே, அவர் வகித்த விவசாயத்துறையை தனக்கு வழங்குமாறு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கோரிக்கை வைத்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. இது தமிழக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக வட்டாரங்களில் இது குறித்து பேசப்பட்டதாகவும் தகவல்கள் வந்தன.

ஆனால், இந்த தகவலுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார். தன் மீது சிலர் திட்டமிட்டே அவதூறை பரப்பியுள்ளனர். இது தொடர்பாக செய்திகள் எந்த ஆதாரமும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது. எந்த சூழ்நிலையிலும் தான் விவசாய அமைச்சர் பதவியை கேட்கவில்லை. அதற்காக சாதி கோஷமும் எழுப்பவில்லை என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் மறுப்பு தெரிவித்துள்ளார். தான் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றி வரும் நிலையில் தன் மீது வேண்டப்படாத சிலர் இந்த தகவலை பரப்பியுள்ளனர். இதை நிச்சயமாக மறுக்கிறேன் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: