டோல்கேட் பகுதியில் வியாபாரிகளால் விபத்து அபாயம்

சின்னாளபட்டி: கொடைரோடு டோல்கேட்டில் 4 சக்கர வாகனங்களை மறித்து பூ, பழம் மற்றும் பொம்மைகளை விற்பனை செய்யும் வியாபாரிகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்து அபாயம் நிலவுகிறது. திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் கொடைரோடு அருகே டோல்கேட் உள்ளது. சுங்கசாவடியை கடந்து செல்லும் 4 சக்கர வாகனங்களை வழிமறித்து வியாபாரிகள் சிலர் பூ மற்றும் பழங்களை விற்பனை செய்கின்றனர். மேலும் வடஇந்தியா வியாபாரிகள் சிலரும் பொம்மைகளை விற்பனை செய்து வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு சில தினங்களே உள்ள நிலையில், 4 வழிச்சாலையில் போக்குவரத்து அதிகளவில் உள்ளது.

இந்நிலையில் வாகனங்களை மறித்து விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்து அபாயமும் நிலவி வருகிறது. இவற்றை தவிர்க்கும் வகையில், டோல்கேட்டிலிருந்து 100அடி தூரம் தள்ளி தங்களது பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: