பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் ஏன் தாமதம்?.. மாநில தேர்தல் அதிகாரி தகவல்

டெல்லி: நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பீகாரில் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில தேர்தல் அதிகாரி சீனிவாஸ்; 4.10 கோடி வாக்குகளில் சுமார் ஒரு கோடி வாக்குகள்(25 சதவீதம்) மட்டுமே இதுவரை எண்ணப்பட்டுள்ளன. மேலும் 3 கோடி வாக்குகள் எண்ணப்பட வேண்டி உள்ளதால் முடிவு தெரிவது பலமணி நேரம் தாமதமாகும். வாக்கு எண்ணிக்கை துவங்கி 5 மணி நேரம் கடந்த நிலையில் 25% வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன.

கொரோனா முன்னெச்சரிக்கையாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டதால் சுற்றுக்கள் அதிகரித்துள்ளன. அதாவது 25, 26 சுற்றுகளுக்கு பதிலாக சுமார் 35 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், வாக்கு எண்ணிக்கை முடிவு முழுமையாக தெரிய வர இன்று இரவு கூட ஆகலாம் என கூறப்படுகிறது. இதனால் முன்னிலை நிலவரத்திலும் மாற்றம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. 243 தொகுதிகளில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி எதுவுமில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் முன்னரே மாநில ஆணையம் தரப்பில் விளக்கம் அளிப்பது இதுவே முதல் முறை ஆகும். இதனிடையே பிகாரில் வாக்கு எண்ணிக்கை தாமதமாகும் என்பதால் தேர்தல் முடிவுகளிலும் மாற்றங்கள் வரும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: