தீபாவளி விடுமுறையில் கூடுதல் கட்டணம் வசூல் ஆம்னி பஸ்களை கண்காணிக்க 15 குழு: போக்குவரத்து துறை அதிகாரி தகவல்

சென்னை: தீபாவளிப் பண்டிகையின்போது ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் 15 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர்  தெரிவித்தார். வரும் 14ம் தேதி தீபாவளி. இதையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதை கண்டறிந்து தடுக்கவும், உரிமம் இல்லாமல் ஆம்னி பஸ்களை இயக்குவதை தடுக்கவும் அரசு நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அதன்படி 11.11.2020 முதல் 18.11.2020 வரை இயக்கப்பட உள்ள ஆம்னி பஸ்சில் வழக்கத்திற்கு மாறாக அதிக கட்டணம் வசூல் செய்வது மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க தமிழக அரசின் கட்டணமில்லா தொலைபேசி  சேவை 1800 425 6151 மூலம் புகார் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை ஏற்கனவே தெரிவித்துள்ளது.

மேலும், போக்குவரத்து துறையின் மூலம் தமிழகம் முழுவதும் இயங்கும் ஆம்னி பேருந்துகளில் மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளுக்கு புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க 15 குழுக்கள் இணைப்  போக்குவரத்து ஆணையர், துணைப் போக்குவரத்து ஆணையர் தலைமையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிறப்பு செயலாக்கப் பிரிவின் மூலம் சிறப்பு தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.  இவர்கள் தங்களுக்கு கிடைக்கும் ரகசிய தகவலின் அடிப்படையில் ஆங்காங்கு அதிரடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்கள்.

Related Stories: