ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதியகோரி மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கொடுக்கப்பட்ட புகார் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனு மீதான  விசாரணையை டிசம்பர் 17ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது.  தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, 2011 முதல் 2013ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்  மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் கடந்த 2014ல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தன் மனுவில், ரூ.7 கோடி அளவுக்கு முறைகேடாக சொத்து சேர்ந்துள்ள ராஜேந்திர பாலாஜி மீது  லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வு, கடந்த 1996ம் ஆண்டு திருத்தங்கல் பேரூராட்சி தலைவராக ராஜேந்திர பாலாஜி பதவியில் இருந்தது முதல் அவருடைய சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பிக்கு உத்தரவிட்டிருந்தனர்.  இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல் கோரினார். இதை ஏற்ற நீதிபதிகள்  விசாரணையை டிசம்பர் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: