கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே ஆந்திர எல்லையோரம் டாஸ்மாக் மதுபான கடை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா மற்றும் தமிழ்நாடு தரப்பு மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஆந்திர எல்லையில் தோக்கம்மூர் ஊராட்சிக்கு உட்பட்ட தமிழக பகுதி உள்ளது. இங்கு ஆந்திர மாநில நபருக்கு சொந்தமான இடத்தில் கடை உள்ளது. அங்கு டாஸ்மாக் கடையை திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மேற்கண்ட கடை அமைந்துள்ள இடத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள காரூர் என்கிற ஆந்திர பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் முனுசாமி என்பவர் தலைமையிலும் தமிழக பகுதி தோக்கம்மூர் ஊராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் மணி, தேமுதிக பிரமுகர் எஸ்.பி.டி.ராஜேந்திரன் முன்னிலையில் சுமார் 100 பேர் மேற்கண்ட பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.