தங்கம் விலையில் அதிரடி மாற்றம் சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு: தீபாவளி நேரத்தில் விலை உயர்வால் நகை வாங்குவோர் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.160 அதிகரித்தது. தங்கம் விலை கடந்த 2 மாதமாக விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. சில நேரங்களில் அதிரடியாக உயர்ந்தும் வருகிறது. இந்நிலையில் கடந்த 30ம் தேதி ஒரு சவரன் ரூ.37,872, 31ம் தேதி ரூ.38,080க்கும் தங்கம் விற்பனையானது. 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் முந்தைய நாள் விலையில் விற்பனையானது. தொடர்ந்து 2ம் தேதி சவரனுக்கு ரூ.8 குறைந்து ஒரு சவரன் ரூ.38,072க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு 3ம் தேதி ரூ.38,160க்கு தங்கம் விற்பனையானது. நேற்று முன்தினம் (4ம் தேதி) ஒரு கிராம் ரூ.4,790க்கும், சவரன் ரூ.38,320க்கும் விற்கப்பட்டது.

நேற்று தங்கம் விலை மேலும் உயர்ந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,810க்கும், சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,480க்கும் விற்கப்பட்டது. வருகிற 14ம் தேதி தீபாவளி வருகிறது. இந்த நேரத்தில் பெரும்பாலானவர்கள் நகை வாங்குவது வழக்கம். இந்த நேரத்தில் தங்கம் விலை உயர்ந்து வருவது அவர்களை அதிர்ச்சிடைய செய்துள்ளது. அது மட்டுமல்லாமல் வரும் நாட்களில் திருமணம் உள்ளிட்ட முகூர்த்த தினங்கள் அதிக அளவில் வருகிறது. இந்த விலை உயர்வு நகை வாங்க நினைப்போருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி வருவதாக நகை வாங்குவோர் கூறிவருகின்றனர்.

Related Stories: