சாலையோரம் நின்ற லாரி மீது பைக் மோதி கம்பெனி ஊழியர் பலி: டிரைவர் கைது

ஆவடி: சாலை ஓரம் நிறுத்தி வைத்திருந்த லாரி மீது பைக் மோதியதில் தனியார் கம்பெனி ஊழியர் பலியானார். செங்குன்றம், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ்(21). தனியார் கம்பெனி ஊழியர். கடந்த 28ம்தேதி மதியம் விக்னேஷ் வேலை முடிந்து கம்பெனியில் இருந்து பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். இவர், புழல்- தாம்பரம் புறவழிச்சாலை, அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பம் சுங்கச்சாவடி அருகே பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது, சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது நிலை தடுமாறி பைக் மோதியது. இதில், விக்னேஷ் பைக்குடன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இதனையடுத்து, அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, டாக்டர்கள் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். புகாரின் அடிப்படையில் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈரோட்டை சேர்ந்த நாகராஜன் (46) என்ற லாரி டிரைவரை கைது செய்தனர்.

Related Stories: