நீட் தேர்வுக்கு வரும் மாணவிகளின் ஆபரணம் அகற்றுவதை எதிர்த்து வழக்கு

சென்னை: நீட் தேர்வில் கலந்துகொள்ளும்   மாணவிகளிடம் செயின், கம்மல், வளையல், தாலி உள்பட பல்வேறு ஆபரணங்களை அகற்ற கூறும் நிபந்தனைகளை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  2017ம் ஆண்டு முதல் மருத்துவ படிப்புக்களுக்கான  நுழைவு தேர்வாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் கலந்துகொள்ள தேர்வு மையங்களுக்கு வரும்  மாணவிகள் ஆபரணங்கள் அணிய கூடாது, பர்ஸ் வைத்திருக்ககூடாது மற்றும்  வாட்ச் அணிய கூடாது உள்ளிட்ட கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுவருகிறது.  இதை எதிர்த்து சென்னையை சேர்ந்த வக்கீல் அரவிந்த் ராஜ் ெசன்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், நீட் தேர்வில் கலந்துகொள்ளும் திருமணமான விண்ணப்பதாரர்கள் புனிதமாக கருதும் தாலி, மெட்டி மற்றும் காதணி, மூக்குத்தி போன்றவற்றை அகற்றும்படி நிர்பந்திக்கபடுகிறார்கள். இந்த நிபந்தனைகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. எனவே, நீட் தேர்வு எழுத வரும் மாணவிகளை ஆபரணங்களை அகற்றும்படி நிர்பந்திக்ககூடாது என்று உத்தரவிடவேண்டும் என்று கோரியிருந்தார்.  இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு 4  வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய சுகாதாரத்துறை, மனித வள மேம்பாட்டு துறை, பொது சுகாதார சேவை இயக்குனர், தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமை ஆகியோருக்கு உத்தரவிட்டனர்.

Related Stories: