வண்ணாரப்பேட்டை எம்சி ரோட்டில் கடைகளை அகற்ற எதிர்ப்பு வியாபாரிகள் தீக்குளிக்க முயற்சி

தண்டையார்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டை எம்சி ரோட்டில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கோரி, நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வழக்கு தொடரப்பட்டது. அதன்பேரில், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, உதவி செயற்பொறியாளர் பழனி தலைமையில் 10க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் நேற்று, எம்சி ரோட்டில் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் 50க்கும் மேற்பட்டேர் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

அப்போது, ‘‘வட்டிக்கு வாங்கி வியாபாரம் செய்கிறோம். தீபாவளி நேரத்தில் இவ்வாறு கடைகளை அகற்றினால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும்,’’ என வியாபாரிகள் தெரிவித்தனர். அதற்கு, நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதாக அதிகாரிகள் கூறினர். இதனால், ஆத்திரமடைந்த வியாபாரிகளில் சிலர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுத்ததால் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ராயபுரம் போலீசார், மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும். அதிகாரிகள் பணி செய்வதை தடுக்க கூடாது. மீறினால் வழக்கு பதிவு செய்யப்படும், என்றனர்.

இதையடுத்து, வியாபாரிகள் கலைந்து சென்றனர்.

Related Stories: