கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைக்கண்ணு தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவமனை நிர்வாகம் தகவல்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமான செய்தியறிந்து, நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்க கடந்த மாதம் 13ம் தேதி தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு சென்னையில் இருந்து சேலத்துக்கு காரில் சென்றார். அப்போது, அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அமைச்சர் துரைக்கண்ணு சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் கடந்த 13ம் தேதியில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நுரையீரல் 90 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. வேறு பல உடல்நல பாதிப்புகளும் உள்ளன. எக்மோ, வென்டிலேட்டர் கருவி மூலம் தீவிர சிகிச்சை தரப்படுகிறது. அமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என அப்போது மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து.

இதனைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் மருத்துவமனைக்கு சென்று உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். இந்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக உள்ளார். அதிகப்படியான உயிர் காக்கும் கருவிகளுடன் அமைச்சர் சிகிச்சை பெற்று வருகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: