கல்லூரி கல்வி இயக்குனராக பூர்ணசந்திரன் நியமனம் ரத்து : சென்னை ஐகோர்ட் அதிரடி

சென்னை: கல்லூரி கல்வி இயக்குனராக பூர்ணசந்திரனை நியமித்து பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.தமிழக கல்லூரி கல்வி இயக்குனராக பதவி வகித்த சாருமதி, 2019 மே 31ம் தேதி பணி ஓய்வு  பெற்றார். அதன் பின் காலியான பதவிக்கு பூர்ண சந்திரனை நியமித்து, கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த அரசாணைக்கு தடை விதிக்க கோரி திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி முதல்வர் கீதா சென்னை  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், கல்லூரி கல்வி இயக்குனராக உள்ளவர், பணி ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன், அப்பதவிக்கான தகுதியானவர்கள் பட்டியலை தயாரித்திருக்க வேண்டும். ஆனால்,  பூர்ணசந்திரனை அப்பதவியில் நியமிப்பதற்காக, காலதாமதமாக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

பூர்ண சந்திரனை விட சீனியரான தன்னை கல்லூரி கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும். எனவே, அவரை நியமித்து பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பார்த்திபன்,  பணி மூப்பில் உள்ள கீதாவை விடுத்து பூர்ணசந்திரனை கல்லூரி கல்வி இயக்குனராக நியமித்ததற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனக் கூறி தமிழக அரசின் அரசாணைக்கு  இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும்,  பூர்ணசந்திரன்  நியமனம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய அரசுத்தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கல்லூரி கல்வி இயக்குநர் பதவி என்பது மிக முக்கியமான  பதவியாகும்.

இந்த முக்கியமான பதவிக்கு தகுதியானவர்களை, திறமையானவர்களை தேர்வு செய்வதற்கு அரசு நீண்ட அனுபவம் பெற்ற கல்வியாளர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவை அமைத்து தேர்வு நடவடிக்கை தொடர்பான வழிகாட்டுதல்களை  உருவாக்க வேண்டும். எந்த துஷ்பிரயோகமும் இல்லாமல் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதுபோன்ற பதவிகளுக்கு தேர்வு செய்யும்போது அடிக்கடி நீதிமன்றம் தலையீடு வருவதை தவிர்க்க வேண்டும். எனவே, கல்லூரி கல்வி இயக்குநர்  பதவிக்கு தகுதியான நபரை தமிழக அரசு தேர்வு செய்ய வேண்டும். இந்த நடவடிக்கைகளை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: