சென்னை: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் 2021ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகளை தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் (நவம்பர்) 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 15ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. முன்னதாக நவம்பர் மாதம் 3ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெறுவதையொட்டி கடந்த வாரம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் கடந்த வாரம் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.