தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பது குறித்து: மாவட்ட கலெக்டர்களுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை: வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்தது

சென்னை: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் 2021ம் ஆண்டு  ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகளை தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் (நவம்பர்) 16ம் தேதி வரைவு  வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 15ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. முன்னதாக நவம்பர் மாதம் 3ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்  நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெறுவதையொட்டி கடந்த வாரம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் கடந்த  வாரம் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி நேற்று மாலை 3 மணிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் (மாவட்ட தேர்தல் அதிகாரிகள்) வீடியோ  கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது, தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 16ம் தேதி வெளியிடுவதற்கான பணிகளை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது குறித்தும், வரைவு வாக்காளர்  பட்டியல் வெளியிடுவதற்கு முன் இறந்தவர்கள் மற்றும் இரட்டை பதிவு வாக்காளர்களின் பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடமும் கேட்டுக் கொண்டார். மேலும், எச்.வசந்தகுமார்  எம்பி மரணம் அடைந்ததை தொடர்ந்து, காலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதியில் இடைதேர்தல் நடத்த தயாராக இருக்கும்படி அறிவுறுத்தினார்.

Related Stories: