சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்காக நடத்தப்பட்ட துணைத் தேர்வில் 10ம் வகுப்பு தேர்வில் 22 சதவீதமும், பிளஸ் 2 தேர்வில் 12 சதவீத தனித் தேர்வர்களும் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் மாணவர்கள், பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் மார்ச் மாதம் நடக்க வேண்டிய பொதுத் தேர்வுகளில் பிளஸ் 2 தேர்வு மட்டுமே நடந்து முடிந்த நிலையில், கொரோனா காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு நடக்கவில்லை. இதையடுத்து பள்ளிகள் மூலம் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தேர்ச்சி அடைந்ததாக அரசு அறிவித்தது. இதையடுத்து, பத்தாம் வகுப்பு பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வில் தனித் தேர்வர்களாக விண்ணப்பித்தவர்கள் மேற்கண்ட முறைப்படி தேர்ச்சி அறிவிக்காமல், அவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்தது.