குட்கா விவகாரத்தில் உரிமைக்குழு அனுப்பிய 2வது நோட்டீசுக்கான தடையை நீக்க கோரி மனு: ஐகோர்ட்டில் பேரவை செயலாளர் தாக்கல்

சென்னை: தமிழக சட்டப்பேரவைக்குள் கடந்த 2017ம் ஆண்டு குட்கா கொண்டு வந்ததாக அனுப்பப்பட்ட உரிமைக்குழு நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாக கூறி ரத்து செய்து ஆகஸ்ட் 25ம் தேதி தீர்ப்பளித்தது.  மேலும், உரிமை மீறல் இருப்பதாக கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உரிய விளக்கங்களை பெற்று நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன் அடிப்படையில், திமுக உறுப்பினர்களுக்கு உரிமைக்குழு இரண்டாவது நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கை செப்டம்பர் 24ல் விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தும், வழக்கு குறித்து பேரவை தலைவர், செயலாளர், உரிமைக்குழு மற்றும் உரிமைக்குழுவின் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, நீதிமன்றம் விதித்த தடையை நீக்க கோரியும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும்,  சட்டமன்ற செயலாளர், உரிமைக்குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சாஹி  அமர்வு, இடைக்கால தடையை நீக்க மறுத்ததுடன், மேல்முறையீடு மனுக்கள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏக்கள் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார். இந்நிலையில், தனி நீதிபதியிடம் விசாரணையில் இருக்கும் வழக்கில் பேரவை செயலாளர் கே.சீனிவாசன் தடையை நீக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு வந்தது உரிமை மீறலா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்க உரிமைக்குழுவுக்கு சுதந்திரம் அளித்துள்ள நிலையில், நோட்டீசுக்கு தடை விதித்தது தவறானது. நோட்டீசுக்கு ஆஜராகி விளக்கமளிக்க வாய்ப்பளித்துள்ள நிலையில் அதில் ஆஜராகாமல் தொடர்ந்த வழக்கில் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் மேற்கொண்டு விசாரணை நடத்த முடியாத நிலை உள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்பு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: