திரையரங்குகள் திறப்பு குறித்து விரைவில் முடிவு பண்டிகை காலங்களில் திரைப்படம் வெளியிட அனுமதி: அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

கோவில்பட்டி: பண்டிகை காலங்களில் திரைப்படங்கள் வெளியிட அனுமதி அளிக்கப்படும் என்றும், திரையரங்குகள் திறப்பு குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ, அளித்த பேட்டி: “மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்குகளை திறக்க வேண்டும். இதுகுறித்து நாளை (28ம் தேதி) நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் முக்கிய ஆலோசனை நடத்துவார்.

சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை ஏசி இல்லாமல் பயன்படுத்த முடியாது. மக்களும் அதை விரும்ப மாட்டார்கள். இதுபோன்று தர்மசங்கடமான பல்வேறு சூழ்நிலைகள் உள்ளன. இதையெல்லாம் தெளிவுபடுத்தி திரையரங்குகளை திறக்க வேண்டும். அவ்வாறு திறக்கப்படும்போது மக்கள் ஒருவர்கூட பாதிக்க கூடாது என்பதில் முதல்வர் தெளிவாக உள்ளார். எனவே, திரையரங்குகள் திறப்பு குறித்து விரைவில் நல்ல செய்தி வரும். பண்டிகை காலங்களில் முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியாக வேண்டும் என ரசிகர்களும், மக்களும் ஆர்வமாக இருப்பது வழக்கம். இதனால் அதற்கு தடையாக அரசு இருக்காது. பண்டிகை காலங்களில் திரைப்படங்கள் வெளியிட அனுமதி அளிக்கப்படும்’’ என்றார்.

Related Stories: