நடிகர் விஜய்சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதையில் நடிப்பதாக இருந்தது. முத்தையா முரளிதரன் இலங்கை அரசின் ஆதரவாளர், தமிழர்களுக்கு எதிரானவர் அவரது கதையில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று எதிர்ப்பு ஏற்பட்டது. இதனால் முத்தையா முரளிதரனின் வேண்டுகோள்படி விஜய்சேதுபதி படத்தில் இருந்து விலகி விட்டார். இந்த நிலையில் ஒருவர் விஜய்சேதுபதியின் மகளுக்கு டுவிட்டரில் பாலியல் மிரட்டல் விடுத்திருந்தார். இதற்கு அரசியல்கட்சி தலைவர்கள், திரைப்பட நடிகர், நடிகைகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அந்த பதிவை வெளியிட்டவரை கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.
போலீஸ் விசாரணையில் அந்த பதிவை வெளியிட்டவர் இலங்கையை சேர்ந்த இந்திய வம்சாவழி தமிழர் என்று தெரியவந்தது. அவரை கைது செய்ய தமிழக போலீசார் முயற்சி செய்து வரும் நிலையில் அந்த இளைஞர் விஜய்சேதுபதியிடம் மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: விஜய்சேதுபதி அண்ணாவின் மகளை பற்றி தப்பான பதிவை வெளியிட்ட இலங்கை தமிழன் நான்தான். இலங்கையில் நடந்த விபரங்கள் அனைத்தும் தெரிந்த அவரே இந்த படத்தில் நடிக்கிறாரே என்ற கோபத்தில் அந்த பதிவை தவறாக வெளியிட்டு விட்டேன். கொரோனாவால் வேலை வாய்ப்பு இழப்பு.
வறுமை இப்படியான மன அழுத்தத்தில் இப்படி ஒரு தவறை செய்து விட்டேன். இதற்காக கடவுள் பெரிய தண்டனையை எனக்கு தர வேண்டும். விஜய்சேதுபதி அண்ணா என்னை ஒரு தம்பியாக நினைத்து மன்னிக்க வேண்டும். விஜய்சேதுபதி அண்ணா, அவரின் மனைவி, என் தங்கை ஆகியோர் என்னை மன்னிக்க வேண்டும். உலக தமிழர்கள் முன் மன்னிப்பு கேட்கிறேன். என் முகமோ, பெயரோ வெளியில் வந்தால் என் வாழ்வு நாசமாகிவிடும். என்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது. அதற்காகவாவது என்னை மன்னிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.