சூனாம்பேடு அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம்

செய்யூர்: சூனாம்பேடு அருகே தனியார் பஸ் நிலை தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டத்தில் இருந்து, சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 18 பேர் தனியார் பஸ்சில் நேற்று மதியம் புறப்பட்டனர். செய்யூர் அருகே சூனாம்பேடு அடுத்த ஈசிஆர் சாலை கப்பிவாக்கம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், தறிக்கெட்டு ஓடி நிலைதடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில், பஸ்சில் பயணம் செய் ஒரு வயது மற்றும் ஒன்றரை வயது குழந்தைகள், ஒரு பெண் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். தகவலறிந்து சூனாம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த 4 பேரை மீட்டு மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். லேசான காயமடைந்தவர்களை, அருகிலுள்ள அரசு மருத்துமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர். இந்த விபத்தால், ஈசிஆர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Related Stories: