பொம்மை துப்பாக்கியை காட்டி அக்கா, தங்கையை கடத்த முயற்சி: நாக்பூரில் வாலிபர் கைது

நாக்பூரில்: மிரட்டி பணம் பறிப்பதற்காக பொம்மை துப்பாக்கியை காட்டி அக்கா, தங்கையை கடத்த முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.நாக்பூரை சேர்ந்தவர் ரோஷன் கண்டேக்கர்(24). இவருடைய தந்தை மினி லாரியை வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வருகிறார். கண்டேக்கருக்கு ₹2.5 லட்சம் கடன் உள்ளது. கடனை அடைக்க இரு சகோதரிகளை கடத்திச் ெசன்று மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.சம்பவத்தன்று நாக்பூர், தரம்பேத்தில் இரு சகோதரிகள், கடைக்கு சென்று பொருட்களை வாங்கினர். பின்னர் வீட்டுக்கு திரும்பிச் செல்வதற்காக காரில் ஏறினர். அப்போது அங்கு வந்த கண்டேக்கர், பொம்மை துப்பாக்கியை காட்டி இரு சகோதரிகளையும் தன்னுடன் வருமாறு கூறினார்.

 பீதி அடைந்த இரு சகோதரிகளும் அலறினர். அவர்கள் அலறியதும், கண்டேக்கர் தனது மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்து கண்டேக்கர் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிளின் நம்பர்களை தெரிந்து கொண்டனர். அது குறித்து விசாரணை நடத்திய போது, அது கண்டேக்கரின் தந்தையின் மினி லாரியின் நம்பர் என்று தெரியவந்தது. இதனிடையே கண்டேக்கர் தன்டோலி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: