சாதாரண விசைத்தறியை தானியங்கி விசைத்தறியாக மாற்ற மானியம் வழங்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சாதாரண விசைத்தறியை, தானியங்கி விசைத்தறியாக தரம் உயர்த்துவதற்கு வழங்கப்படும் மானியத்திற்கு விண்ணப்பித்தும் 3 ஆண்டுகளாக  வழங்கப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய ஜவுளித்துறை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சர்வதேச அளவில் துணித்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கைத்தறி உற்பத்தியை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் வகையில்   விசைத்தறியை தானியங்கி விசைத்தறியாக மாற்ற மானியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.  மத்திய அரசின், இந்த மானியம்  பெறுவதற்காக விசைத்தறி நெசவாளர்கள் அளித்த விண்ணப்பங்களை பரிசீலித்த  ஜவுளித்துறை இணை இயக்குனர் தறி நெய்யும் இடங்களை  நேரடியாக ஆய்வு செய்து புகைப்படங்களையும் எடுத்துள்ளார்.

ஆனால் இந்த விண்ணப்பங்கள் மீது கடந்த 3 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மானியமும் வழங்கப்படவில்லை.இந்நிலையில்,  தங்களுக்கு மானியம் வழங்கக்கோரி கோவையை சேர்ந்த அசோக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர்  தாக்கல் செய்த மனுவில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்ற தகவலின்படி, தானியங்கி விசைத்தறி மானிய திட்டத்தை அமல்படுத்த  மத்திய அரசு, 2020-21ம் ஆண்டிற்கு 7 கோடியே 69 லட்சம் ஒதுக்கி இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால், விண்ணப்பித்து 3 ஆண்டுகளாகியும்  இதுவரை மானியம் வழங்கப்படவில்லை. எனவே, எங்களுக்கு மானியம் வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவுக்கு ஜனவரி 4ம்  தேதிக்குள் பதிலளிக்கும்படி  இந்திய ஜவுளித்துறை ஆணையர், கோவை மண்டல இணை இயக்குனருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

Related Stories: