சென்னை: தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்துள்ள நிலையில், வட கிழக்கு பருவமழை அக்டோபர் 20ம் தேதி தொடங்க வேண்டியது தள்ளிப்போனது. தற்போது அதற்கான சூழல் உருவாகியுள்ளது. இதன்படி அக்டோபர் 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, கடந்த 4 நாட்களாக வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மதியம் 12.15 மணி அளவில் கொல்கத்தா அருகே கரையைக் கடந்தது. இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக ஏற்பட்ட வளி மண்டல மேலடுக்கில் உருவான காற்று சுழற்சியால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக, நேற்று திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் 170 மிமீ மழை பெய்துள்ளது.