சென்னை: உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவதூறு செய்தி பரப்பிய இரண்டு யூ-டியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி பரபரப்பு புகார் அளித்துள்ளார். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி சார்பில் அவரது வழக்கறிஞர் சசிகுமார் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சினிமா துறையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன். 82 வயதில் நல்ல ஆரோக்கியத்துடன் எனது குடும்பத்துடன் வசித்து வருகிறேன். காலையில் அதிர்ச்சி தரும் அழைப்பு ஒன்று வந்தது. அதில் யூ-டியூப் சேனலான ‘தமிழ் சினி மற்றும் தமிழ் 360’ என்ற இரண்டு யூ-டியூப் சேனலில் எனது உடல்நிலை கடுமையாக பின்னடைவு ஏற்பட்டு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளதாக கூறினர்.