சென்னை: தமிழகத்தில் இந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார். இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை சராசரியை விட 24 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. . இதனால் தமிழகத்தில் பெரும்பாலான அணைகளில் நீர்மட்டம் சென்ற ஆண்டை விட உயர்ந்துள்ளது. சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் பூண்டி, செங்குன்றம், செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு இன்றைய தேதியில் கடந்த ஆண்டில் உள்ள கொள்ளளவை விட அதிகமாக உள்ளது. வீராணம் நீர் தேக்கத்தின் கொள்ளளவு மட்டும் குறைவாக உள்ளது. வடகிழக்கு பருவமழை, இந்த மாத இறுதியில் பெய்யத்தொடங்கும்.