திருவள்ளுர்: கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வௌியிட்ட அறிக்கை: தமிழக அரசு படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தினை அறிவித்து 2020-21ம் வருடத்திற்கு இலக்காக 195 மனுதாரர்களுக்கு மானியமாக ₹125 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 35 வயது பொது பிரிவினருக்கும், 45 வயது சிறப்பு பிரிவினருக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ₹5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அதிகபட்சம் உற்பத்தி தொழிலுக்கு ₹10 லட்சம், சேவை மற்றும் வியாபாரத்திற்கும் ₹5 லட்சம் வரை கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். மேலும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேர்காணல் மற்றும் பயிற்சியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.